புழல்: புழல் அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகுல்(22). இவரது தம்பி முரளி(19). அதே பகுதியை சேர்ந்த ராகுலின் நண்பர் ராமு(24). நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த கவுதம்(26) என்பவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கவுதம், ராமுவை உருட்டைகட்டையால் பலமாக தாக்கினார். இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு ராகுல், முரளி, கார்த்திக் ஆகியோர் கவுதமிடம் தகராறு செய்தனர். அப்போது, குடிபோதையில் இருந்த புழல் காவல் நிலைய ஊர்க்காவல் படையை சேர்ந்த சரத்(28), அருண்(26), ஜெயபிரசாந்த்(28), சதீஷ்(26) ஆகியோர் இரும்பு ராடால் தாக்கியதில், ராகுல், முரளி படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊர்க்காவல் படையை சேர்ந்த சரத், கவுதம், அருண், ஜெயபிரசாந்த் ஆகியோரை கைதுசெய்து தலைமறைவான சதீஷை தேடுகின்றனர்.